Followers

Thursday 23 August 2018

‬: சித்தர்கள் எத்தனை கனிவான மனம் கொண்டவர்கள் என்பதை ஒரு சிலரே அறிவர்.  அதை அனுபவித்துப் பார்ப்பதற்கே மிகப் பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  நம் கர்மாவை பார்த்து, நம் தகுதியை பார்த்து, நம் எதிர்கால நடவடிக்கைகள் "தெய்வ நம்பிக்கையை" சார்ந்து இருக்குமா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்த பின்தான் அவர்கள் அருள் நமக்கு விதிக்கப்படும். எல்லாம் அவன் செயல் என்பது நிதர்சனமாயினும், பல நேரங்களில் மனிதர்களான நாம் அதையும் மறந்து விடுகிறோம் என்பதே உண்மை.  ஏன்?  நம் வாழ்க்கையில் நம் கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் காரணம்.  சோதனை இல்லாமல் ஒருபோதும் சித்தர் அருள் நமக்கு கிடைக்காது.  அந்த சோதனை நடக்கும் போது, நாம் எப்படி நடந்து கொள்கிறோம், அவர்கள் பரீட்சையில் நாம் தேறுகிறோமா என்பதெல்லாம் பொறுத்து அவர்கள் அருள் நமக்கு கிடைக்கும்.  உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

அவன் வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.  வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.  கடன் சுமை தலைக்கு மேலே உயர, குடும்பத்தை, அதன் தினப் பிரதி விஷயங்களை சந்திக்ககூட சக்தி இன்றி வாழ்க்கையே கை விட்டு போய், என்ன செய்வதென்று அறியாமல் நடந்தான்.  திடீரென்று ஏதேனும் மலை சார்ந்த இடத்திற்கு சென்று காட்டுக்குள் போய் "தற்கொலை" செய்துகொள்ளலாம் என்று தோன்றவே, மலை ஏறத் தொடங்கினான்.  அவன் சென்று சேர்ந்த இடம் "பொதிகை மலை" அடிவாரம்.

கைவசம் சாப்பிட எதுவும் இல்லாமல், பசியும் அசதியும் ஒன்று சேர, வனத்தில்  ஒரு வேப்பிலை மரத்தின் அடியில் அமர்ந்து உறங்கிப் போனான்.

நன்றாக உறங்கியவன், ஏதோ சப்தம் கேட்டு விழித்துப் பார்க்க, தன் முன்னே ஒரு மண் குடுவையில் குடிக்க நீரும், ஒரு இலையில் சுற்றப்பட்ட உணவும் இருப்பதை கண்டான்.  அவனுக்கோ மிகுந்த ஆச்சரியம்.  மனிதர் வாடையே இல்லாத இந்த வனத்தில் நான் பசியுடன் இருக்கிறேன் என்று உணர்ந்து யார் உண்ண உணவும், குடிக்க நீரும் யார் கொண்டு வைத்திருப்பார்கள்?  என்ன ஆனாலும் யோசிக்க அவன் மனம் நிற்கவில்லை.  அவற்றை எடுத்து உண்டான்.

இந்த இடத்தில் தங்கி இருப்பது தான் உசிதம் என உணர்ந்து, "இங்கேயே தங்கிவிடுவோம்!  உணவு கிடைத்தால் உண்போம்! இல்லையேல், இறைவனை த்யானித்து தவத்தில் மூழ்கிவிடுவோம்" என்று தீர்மானித்தான்.  தற்காலிகமாக "தற்கொலை" எண்ணம் விலகி நின்றது.

மூன்று நாட்கள் கழிந்தது.  அவனுக்கு பசிக்கவும் இல்லை, யாரும் உண்ண உணவு கொண்டு தரவும் இல்லை.  நான்காவது நாள் அவனுக்குள் பசி உணரத் தொடங்க, த்யானத்திலிருந்து வெளியே வந்து கண் விழித்துப் பார்க்க, அவன் முன்னே உணவும் நீரும் இருந்தது.  மிகுந்த ஆச்சரியத்துடன் அதை உண்ணத் தொடங்கினான். 

உண்ணும் போதே "யார் இத்தனை கருணையுடன் நான் இருக்கும் இடம் தேடி வந்து உணவை அளிப்பது?  எப்படி அவர்களுக்கு நான் இங்கு பசியுடன் இருக்கிறேன் என்று தெரிந்தது?"  என்று யோசித்தான்.

அந்த நிமிடத்தில் காட்டின் ஒரு மூலையில் இருந்து சன்னமாக வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்தது.

"மூடனே!  தகுதியில்லாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அளவுக்கு மீறி வியாபாரம் செய்ய ஆசைப்பட்டு, கடன் வாங்கி குவித்தாய்.  வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு மேலே சென்றதும், உன்னை நம்பி இருந்த குடும்பத்தை தவிக்கவிட்டு, இங்கு வந்து தற்கொலை செய்துகொள்ள வந்தாய்.  இங்கிருந்து சென்று விடு.  உன் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.  இப்பொழுதே போ!" என்று உத்தரவு வந்தது.

ஆனால், அவன், தன் கடன் சுமைகளை மனதில் வைத்து "பணம் கிடைக்க வேண்டும்.  அது அன்றி இங்கிருந்து நகருவதில்லை.  இல்லையேல் இங்கேயே இருந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து, முடிவை எதிர்கொள்வேன்" என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தான்.

 அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.  அவன் அந்த வார்த்தைகளை சட்டை செய்வதாகவே இல்லை.

த்யானத்தை தொடர்ந்தான்.

மூன்று நாட்கள் சென்றது.  எந்த உணவும் கிடைக்கவில்லை.  அவனுக்கும் பசிக்கவில்லை.  அந்த அசரீரி மட்டும் விட்டு விட்டு அவனை "திரும்பிப் போ" என்று சொல்லிக் கொண்டிருந்தது. 

இனி எதிர்பார்த்து காத்திருப்பதில் பயனில்லை என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்து அருகிலிருந்த உயரமான குன்றிலிருந்து கீழே குதித்தான்.

வேகமாக பூமியை நோக்கி வந்த அவன் தன் சுய நினைவை இழந்தான்.

நினைவு வந்து முழித்துப் பார்க்க, அவனை ஒரு சித்தர் தன கைகளில் மேகக்கூட்டத்திற் கிடையில்  சுமந்து செல்வதை உணர்ந்தான்.  மிகுந்த பசியின் காரணமாக மீண்டும் நினைவிழந்தான்.

தன் முகத்தில் நீர் தெளிக்கப்படுவதை உணர்ந்து மயக்கம் தெளிந்து பார்க்க அங்கே ஒரு சித்தர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் அவனை கருணையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்.  அவர் அவனுக்கு தேனும், பழங்களும் கொடுத்து பசியாற்றியபின் பேசத்தொடங்கினார்.

"அப்பனே!  உன் பிரச்சினைகளுக்கான விமோசன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  திரும்பி உன் வீட்டிற்கு செல்.  அங்கே அனைத்தும் உனக்கு புரியும்.  தற்கொலை செய்கிற உனது திடமான எண்ணத்தை கை விடு.  இது புனிதமான மலை.  இங்கே தவறை செய்து இந்த மலையை அசுத்தமாக்காதே! உனக்கு இன்னும் விதி உள்ளது.  நல்ல முறையில் நல்லது செய்து வாழ்ந்து வா.  எனது ஆசிகள் உனக்கு" என்றார்.

நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று புரியவில்லை அவனுக்கு.

"சாமி! நீங்க யாரு!  உங்க பேர் என்ன?  எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?"

"நான் கோரக்கர்..  தலையாய சித்தர் அகத்தியரின் உத்தரவால் உன்னை காப்பாற்றி கரை ஏற்றினேன். நீ புண்ணியவான்" என்று கூறி அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிரித்தபடி நடந்து சென்று மறைந்து போனார்.

என்னவோ கேட்க நினைத்தவன் ஒரு அடி எடுத்து வைக்க, காலில் ஏதோ ஒன்று தட்டியது.

குனிந்து கீழே பார்த்தவனுக்கு ஒரு மண் பானை கண்ணில் பட்டது.  மெதுவாக அதை திறந்து பார்த்தவன் அசந்து போனான்.

அது நிறைய பணம் இருந்தது.  தனக்கென சித்தனால் விதிக்கப்பட்டது என்று உணர்ந்து,   அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்னொரு அதிசயம் காத்திருந்தது.

அவன் வாங்கியிருந்த கடன் அனைத்தையும் யாரோ ஒரு முன் பின் தெரியாத ஒருவர் வந்து அடைத்து தீர்த்துவிட்டிருந்தார்.

அனைத்தையும் அப்போது உணர்ந்த அவன் அன்று முதல் நேர் வழியில் சென்று, நிறைய சம்பாதித்து, ஆன்மீகத்தில் பல நிலைகளை அடைந்து, இன்றும் சித்தர் காட்டிய வழியில் செல்கிறான்.

அதீத ஆசைகளால் அலைக்கழிந்திருந்தாலும், சித்தனால் அருளப் பெறுகிற அளவுக்கு அத்தனை புண்ணியம் செய்தவனா நான் என்று ஒருநாள் த்யானத்தில் சித்தரிடம் கேள்வி கேட்க

"ஆம்! நீ புண்ணியம் செய்தவன் தான்" என்று பதில் கூறினார் கோரக்கர்.

இன்றும் சித்தர்கள் நம்மிடை இருந்து கொண்டு, ஆபத்து காலத்தில் நம்மை கை தூக்கி விடுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.

குருவே சரணம்...

ஸ்ரீ ரமண பாதம்

No comments:

Post a Comment